---------------------------------------------------------
சித்தாந்த செம்மணி முனைவர். பழ. முத்தப்பன்.
திருச்சி.
சங்க அக இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களின் நெறியில் பின்வந்த நூல்களில் குறிப்பிடத் தக்கது கல்லாடம் என்ற அகப்பொருள் நூலாகும். கல்லாடர் என்ற புலவர் படைத்தருளியமையால் கல்லாடம் என்று பெயர் பெற்றது. இந்நூல் 102 அகவற்பாக்களைக் கொண்டது. முதல் இரண்டு பாடல்கள் பாயிரப் பாடல்களாக விநாயகர் முருகன் வணக்கப் பாடல்கள் அமைந்து , பின் 100 பாடல்கள் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலிற்கு எம்எளிய உரை உமாபதிப்பகத்தின் மூலம் 2015- ல் வெளியிட்ட பொழுது எழுந்த சிந்தனைகள் கட்டுரையாக அமைகின்றது.
தமிழ் வரலாற்று ஆசிரியர் மு. அருணாசலம் பிள்ளை அவர்கள் திருவள்ளுவ மாலை பற்றிக் குறிப்பிடும் பொழுது, (தமிழ் இலக்கிய வரலாறு தி. பார்க்கர் பதிப்பு ,பதினோறாம் நூற்றாண்டு, ப. 34 ) ஷஷஇதுகாறும் கூறிய கருத்துக்களைத் தொகுத்துப் பின்வருமாறு கூறலாம். 53 பாடல்களைக் கொண்ட திருவள்ளுவமாலை திருவள்ளுவர் காலத்தில் பாடப்பெற்றது அன்று. பத்திற்கும் குறைவான பாடல்கள் பழம் பாடல்களாக அமைந்துள்ளன. அவற்றுடன் மிகப் பலவான புதிய பாடல்களைத் தாமே எழுதிச் சேர்த்துப் பிற்காலப் புலவர் ஒருவர் திருவள்ளுவமாலை எனப் பெயரிட்டார். பாடல்களுக்குச் சங்கப் புலவர்கள் பெயர்களையும் சூட்டினார். இவர் கல்லாடம் செய்த கல்லாடர் காலத்தில் அவருக்கு நண்பராய் வாழ்ந்திருத்தல் கூடும். இவர் காலமும் கல்லாடர் காலமாகிய கி.பி. 1050 ஐ ஒட்டியே இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் மு. அருணாசலம் பிள்ளை அவர்கள் கூற்றுப்படி திருவள்ளுவமாலை எழுதியதாகக் கூறப்படும் புலவரின் காலமும் கல்லாடர் நூல் தந்த கல்லாடரின் காலமும் கி.பி. பதினோறாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
தமிழிலக்கிய வரலாற்றில் கல்லாடர் என்ற பெயரில் பல புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் பதினான்கு செய்யுட்களைப் பாடிய கல்லாடர் ஒருவர். சைவத்திருமுறையில் பதினோறாம் திருமுறையில் திருகண்ணப்ப தேவர் மறம் பாடிய கல்லாடர் இரண்டாமவர். திருவள்ளுவ மாலையில் ஒன்பதாவது பாடலைப் பாடியவரும். கல்லாட நூலைப் பாடியவருமாகிய கல்லாடர் மூன்றாமவராவார். அடுத்துத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய கல்லாடர் நான்காமவராவார்.
திருவள்ளுவ மாலையோடு கல்லாடம் தந்த புலவருக்குத் தொடர்பு இருந்தமை கல்லாடம் நூலில் இடம்பெற்ற அகச்சான்றால் அறியமுடிகிறது. ஷஷநண்ணிய பாதி ' என்று தொடங்கும் கல்லாடம் பதினான்காம் பாடலில்
(2)
ஷஷசமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருள்இது என்ற
வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான். (பா. 14 வரி 20 - 23)
என்று சிவபெருமானையும் , திருவள்ளுவமாலையில் முதற் பாடலாக இடம் பெற்றுள்ள இறையனார் பெயரில் அமைந்துள்ள பாடலையும் சிறப்பிக்கின்றார் கல்லாட ஆசிரியர். இப்பாடலில் இடம் பெற்ற சமயக் கணக்கர் என்ற சொற் பொருள் திருவள்ளுவமாலையில் இடம் பெற்ற கல்லாடரின் பாடலில் அறுசமயத்தார் நன்றென என இடம்பெற்றுள்ள சொற்பொருளை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். எனவே திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ள கல்லாடர் பாடியதாகக் கூறப்படும் பாடலுக்கும் , கல்லாடர் நூலை இயற்றிய கல்லாடருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணம் வெளிப்படுகிறது.
கல்லாடருக்குத் திருக்குறளில் பற்று இருந்தமைக்குக் கல்லாடம் நூலில் இடம்பெற்றுள்ள ,
ஷஷநிறைமதி புரையா நிறைமதி புரையா
தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்து
குறைமதி மனனே நிறைமதி புரையா '{பா.62. வரி 1-3)
என்ற பகுதி எடுத்துக்காட்டாக அமைகிறது. இத்தகு நிலையில் திருக்குறளைப் போற்றும் கல்லாடர், தம்முடைய கல்லாடர் நூலில் சங்க இலக்கிய நடையில் அகப்பொருள் செய்திகளை முறையாகத் தொகுத்துச் சொல்லுகிறார். அதிலும் மணிவாசகப் பெருமான் பாடிய திருக்கோவையாருள் நூறு துறைகளைப் பொறுக்கித் தொகுத்து, அவைகளின் கருத்து அமைய மதுரைத் திருவிளையாடல் வரலாறுகளையும், பெரிய புராணத்தில் கண்ணப்பர், காரைக்காலம்மையார், சாக்கியநாயனார் முதலானோர் வரலாற்றையும், இராமாயண பாரதச் செய்திகளைச் சுருக்கியும், திருப்பரங் குன்றத்துச் சிறப்பையும், முருகப் பெருமானின் வரலாற்றையும் உள்ளடக்கிய நூறு பாடல்களைக் கல்லாடர் பாடியுள்ளார். இப்பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சைவ சித்தாந்தக் கருத்துகள் பொன்னேட்டில் மணிகள் பதித்தது போலப் பதிவு செய்யப் பெற்றுள்ளன.
இறை நிலை :
கல்லாடப் பாடல்களில் மதுரைச் சோமசுந்தரப் பெருமானின் பெருமைகளை ஆசிரியர் பாடல்கள் தோறும் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும் பொழுது தத்துவக் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார். அப் பதிவுகள் பிற்காலச் சாத்திர நூல்களில் பிரதிபலிக்கின்றன.
(3)
ஷஷஎல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான் அதில் தோன்றாத்
தன்னிடை நிறையும் ஒருதனிக் கோலத்து
இரு வடிவு ஆகிய பழமறை வேதியன்' (பா.94, வரி 4-7)
என்பது இறைவனின் இலக்கணத்தைக் குறிப்பிடுகின்ற பகுதியாகும். இதன் பொருள் - உலகம் எல்லாம் தன் சந்நிதியின்கண் தோன்றுமாறு செய்தாலும், தான் அசையாது (விகாரப்படாமல்) வீற்றிருக்கின்ற காட்சியும், அவையெல்லாம் தன்னிடத்தில் உண்டாகித் தான் அதில் தோயாத தனித்த நிலையில் எல்லாவற்றிலும் வியாபகமாக நிறைந்துள்ள , தனது ஒப்பில்லாத ஓர் வடிவில் சிவம் சத்தி என்னும் இருவடிவம் இருக்க, பழமையான வேதப் பொருளாய் உள்ளவன் இறைவன் என்பதாகும். இதன் கருத்து எல்லாப் பொருள்களையும் படைத்து அவற்றைத் தனக்குள் அடக்கிக் கொண்டு , அவற்றை இயக்கித் தான் இயங்காது சத்தியும் சிவமுமாகப் பிரியாது இருப்பவன் இறைவன் என்ற இலக்கணம் பெறப்படுகிறது. இதனைப் பின்வந்த சாத்திர நூல்களில் மெய்கண்டார் தந்தருளிய சிவஞானபோத ஐந்தாம் சூத்திரம் அப்படியே பிரதிபலிக்கிறது.
ஷஷவிளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்கவை போலத்
தாம் தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே'
என்பது சூத்திரம். இதன் பொருள் - உயிரால் இயங்குகின்ற இந்திரியங்கள் தம்மை இயக்குகின்ற உயிரை அறியாது. அதுபோல உயிரானது தம்மை இயக்குகின்ற இறைவனை அறியாது. உயிர்களை இயக்குகின்ற இறைவன் உயிர்களை இயக்கினாலும் தான் எவ்வித விகாரமும் இல்லாது இரும்பை இயக்குகின்ற காந்தம்போல இருப்பான் என்று குறிப்பிடுகிறது. கல்லாடத்தின் பொருளைச் சிவஞானபோதம் காந்தம் கண்ட பசாசம் என்ற உவமையின் மூலம் , அதாவது காந்தம் தன் சந்நிதியில் இருக்கின்ற இரும்பை இயக்கினாலும், தான் அசைவதில்லை என்பதன் மூலம் என்று குறிப்பிடுகிறது. அவ்வாறு எவ்வித விகாரமும் இல்லாத இறைவன் சத்தியோடு என்றும் பிரியாது இருப்பான் என்பதை அனைத்துச் சாத்திரங்களும் தெற்றெனப் புலப்படுத்துகின்றன. அதிலும் சிவஞான சித்தியார்,
ஷஷ-------------------- ------------- சத்திபோல் அறன் உடையதாகிப்
புத்தி முத்திகளை எல்லாம் புரிந்து அவன் நினைத்தவாறாம்.'
(சிவஞானசித்தியார், சுபக்கம்,பா.81)
என்றும், திருவருட்பயன்,
ஷஷதன் நிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்' (திருவருட்பயன், பா.2)
(4)
என்றும் சாத்திரங்கள் குறிப்பிடுவதை இங்கு ஒப்பிடலாம்.
உயிர் நிலை :
உயிர்கள் தங்கள் சிற்றறிவால் இறைவனை அறிய முடியாது. மற்ற கருவிகளாலும் (பாசத்தாலும்) அறியமுடியாது. இறையருளால்தான் அறிய முடியும் என்பது சித்தாந்தக் கொள்கையாகும். உயிர்கள் இறைவனை அறிய முடியாது என்பதனை,
ஷஷ தோடுஅணி கடுக்கைக் கூடல் எம்பெருமான்
எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத்
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன'
(கல்லாடம் பா. 68, வரி 20 - 22)
என்றும்,
ஷஷகண்ணினில் காணாது உளத்தினில் புணராது
நின்றென கண்டு நெடும்பயன் படைத்த
திரு அஞ்செழுத்தும் குறையாது இரட்ட
இரு நிலம் உருவிய ஒரு தழல் '
(கல்லாடம், பா.60, வரி 22 - 25)
என்றும் கல்லாடம் உயிர் இறைவனைத் தன்னறிவால் அறியாது என்பதனைக் குறிப்பிடுகிறது. இந்த உயிரின் இலக்கணத்தைப் பின்னால் வந்த சாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
ஷஷஅறிந்தவை மறைத்த லானும்
அறிவிக்க அறித லானும்
அறிந்திடும் தன்னை யும்தான்
அறியாமை தானும் தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம்
அறிவிக்க அறிவன் அன்றே.'
(சிவஞான சித்தியார்,சுபக்கம்.பா 233)
என்ற பாடல் ஒப்பிட்டுக் காணத் தக்கதாகும். அடுத்து உயிர்கள் தாம் செய்த முன்வினைகளால் இறைவன் அளிக்க உடம்பைப் பெறுகின்றன என்பது சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாகும். இதனைக் கல்லாடம் குறிப்பிடும் பொழுது,
ஷஷவினை உடல் புணர வரும் உயிர் பற்றிப்
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல'
(கல்லாடம் பா. 63, வரி 46 - 47)
என்றும்,
ஷஷஉயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க
கட்டுடைச் சூர் உடல்'
என்றும்,
என்றும் பழவினை காரணத்தால் உயிர்களுக்கு உடல்கள் அமைகின்றன என்பதைக் கல்லாடம் குறிப்பிடப் பின்னால் வந்த சாத்திரங்கள் இதனை வலியுறுத்துகின்றன.
ஷஷஉள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம் முன்செய் வினை உள்ளடைவே'
(சிவஞானபோதம், சூ. 2 - 2 -1)
என்றும்,
ஷஷஉடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறு ஏது என்னின்
விடப்படும் முன்உ டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக்கொன்று தொன்றுதொட்டு அநாதி - வித்தின்
இடத்தினின் மரம், மரத்தின் வித்தும் வந்து இயையு மாபோல்'
(சிவஞானசித்தியார் , சுபக்கம், பா. 100)
என்று குறிப்பிடப்பெறும் சாத்திரப் பகுதிகள் கல்லாடப் பகுதிகளோடு ஒப்பு நோக்கத் தக்கனவாம்.
பாசநிலை:
சித்தாந்தம் கூறும் முப்பொருள் நிலையில் மூன்றாவதாக இடம் பெறுவது பாசநிலையாகும். பாசமாகிய பற்றினை நீக்கினால்தான் இறையருளைப் பெறமுடியும் என்பது தத்துவக் கொள்கையாகும்.; இதனைக் கல்லாடம்,
ஷஷநில நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி
வான் தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி
புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை
கான்றிடு சொன்றியின் கண்டு , அருவருத்து
புலன் அறத் துடைத்த நலன்உறு கேள்வியர்'
(கல்லாடம், பா. 83, வரி 1 - 6)
என்ற இப்பகுதியில் நீர்க்குமிழி போல நிலையற்ற உடம்பு வினையால் தோன்றி , சந்திரனைப் போலக் குறைந்து , கீழ் மக்களின் சபதம் போல அழிந்து, சிறிய உணவாகிய இன்பத்தைப் பெற்று உடம்பானது இல்லற வாழ்க்கையை அனுபவிக்கிறது. அவ்வாழ்க்கையைக் கக்கிய சோற்றைப் போல அருவருப்பு அடைந்து ஐம்புல வாசனையை முற்றும் துடைத்த வேள்வியாளர் என்ற பொருள் அமைந்துள்ளது. இந்த ஐம்புலன் அடக்கத்தைத் தான் சிவஞானபோதத்தின் எட்டாம் சூத்திரம் வெளிப்படுத்துகிறது. மேலும் மூன்றாம் அதிகரணத்தில் ,
ஷஷபொய்ப்புலனை வேறுணர்ந்து பொய் பொய்யா மெய்கண்டான்
மெய்ப்பொருளுக்குத் தைவவவாம் வேறு '
(8 - 3 - 1)
என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு சங்கப் பனுவலின் தொடர்ச்சியாய் அமைந்த அகப்பொருள் இலக்கியமாம் கல்லாடம் சைவசமய வரலாறுகளும், புராணச் செய்திகளும் அமைந்திருப்பதோடு, சைவ சித்தாந்தச் சாத்திரங்களின் கருத்துகளையும் பதிவுசெய்து முன்னோடியாகத் திகழ்கிறது எனலாம்.
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக