புதன், 26 ஜனவரி, 2022

மூதுரை சிந்தனைகள்


முனைவர்.பழ. முத்தப்பன்


தமிழ் மொழி இலக்கிய வளம் மிக்கது. தமிழ் இலக்கியங்களை அவை கூறும் அடிப்படைக் கருத்துகளுக்கு ஏற்ப இலக்கிய ஆய்வாளர்கள் அதனைப் பலவகையாக வகைப்படுத்துவர். பண்டைத் தமிழரின் அக வாழ்க்கையையும் , புற வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்ற இலக்கியங்களைச் சங்ககால இலக்கியங்கள் என்றும், தமிழரின் வரலாற்றை அதிலும் தனிமனித வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்ற இலக்கியங்களைக் காப்பிய இலக்கியங்கள் என்றும், தெய்வ உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியங்களைப் பக்தி இலக்கியங்கள் என்றும், அறக்கருத்துகளை வலியுறுத்தும் இலக்கியங்களை நீதி இலக்கியங்கள் என்றும் பலவாறாக வகைப்படுத்துவர். இவ்விலக்கிய வகையில் சிறப்புப் பெற்று விளங்கும் நீதி இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

நீதி இலக்கியம் என்ற வடிவு பிற்காலத்தே தோன்றியதாகும். பண்டைக் காலத்தில் கருத்துகள் அடிப்படையில்தான் அறம் வலியுறுத்தப் பெற்றது. அறக்கருத்துகளின் தோற்றம் சங்க இலக்கியங்களிலேயே அமைந்து , பின் வரும் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்தது என்பது உறுதி. சங்க இலக்கியங்கள் தோற்றுவித்த அறக்கருத்துகள் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பகுப்பில் தனித்தனி இலக்கியங்களாக வளர்ந்தன.


அப் பதினெணகீழ்க்கணக்கு நூல்களை அடுத்து அறக்கருத்துகளை இளம் பருவத்திலேயே மனதில் பதிய வைக்க வேண்டும் என்று நீதி நூல்கள் என்ற வடிவில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பிற்கால நீதி இலக்கியங்கள்  தோன்றின.  பிற்கால நீதி இலக்கியங்களின் தோற்றத்திற்கு வித்திட்டவர் பெண்பாற் புலவர்களில் ஒருவரான ஒளவையார் ஆவார். தமிழகப் புலவர் வரலாற்றில் ஒளவையார் என்ற பெயரில் அந்தந்தக் கால கட்டங்களில் பல புலவர் பெருமக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் மூவர் குறிப்பிடத் தக்கவர். சங்ககாலத்தில் கபிலர், பரணர் இவர்களோடு ஒத்து வாழ்ந்து, சங்கப் பாடல்களில சுமார் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடிய சங்ககாலத்து ஒளவiயார் ஒருவர். பின்னர் கடையெழு வள்ளல்களின் காலத்தில் வாழ்ந்து, 

ஷஷபாரி பறித்த பறியும், பழையனூர்க்

காரியன்று ஈந்த களைக்கோலும் , - சேரமான்

வாராய் என அழைத்த வாய்மையும் - இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு நேர்'

என்பன போன்ற தனிப்பாடல்களைப் பாடிய ஒளவையார் மற்றொருவர். அதன்பின் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்து தமிழ்க் கடவுள் முருகனோடு தொடர்புடையவர் மூன்றாவதாக இடம்பெறும் ஒளவையார் ஆவார்.  சுட்டகனி சுடாதகனி என்ற வரலாற்றோடு தொடர்பு உடையவராய் ஆத்திசூடி , கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நீதி இலக்கியங்களைப் படைத்தருளியவர் அவ் ஒளவையார். 


கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய அந்த ஒளவையார் பாடிய ஆத்திசூடி உயிர்எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டு 109 வரிகளில் நீதிக்கருத்துகளை வலியுறுத்தும் தனிஒரு நூலாகும். ஆத்திசூடி போலவே நான்கு சீர்களில் தனித்தனி வரியாக 91 வரிகளைக் கொண்டு நீதிக்கருத்துகளை வலியுறுத்துவது கொன்றைவேந்தன் என்ற மற்றொரு நூலாகும். 

மூதுரை என்பது விநாயகர் காப்புச் செய்யுளுடன் முப்பது வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டதாகும்.  வாக்குண்டாம் என்று விநாயகர் காப்புச் செய்யுள்  தொடங்குவதால்  இந்நூலுக்கு வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு. தனித்தனி வரிகளில் நீதிக்கருத்துகளை வலியுறுத்திய ஒளவையார் , நான்கு வரிகள் கொண்ட நேரிசை வெண்பா முப்பதினால் நீதிக்கருத்துகளை இந்நூலில் வலியுறுத்தியுள்ளார். முதுமொழி என்ற பொருளில் இந்நூல் மூதுரை என்ற பெயரைப் பெற்றுள்ளது.   இந்நூல் எளிய நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் உவமைகளைக் கொண்டு விளக்குகின்றது. காப்புச் செய்யுளைத் தவிர முப்பது பாடல்களும் ஏதேனும் ஒரு உவமையைப் பெற்றுள்ளமை இந்நூலுக்குரிய சிறப்பாகும். 

விநாயகப் பெருமானை மலர்கொண்டு போற்றி அவருடைய திருவடிகளை வணங்கினால் திறமையான பேச்சு உண்டாகும், இலக்குமியின் கருணையால் செல்வம் உண்டாகும் , உடல் நலமும் கிடைக்கும் என்று காப்புச் செய்யுள் , கல்வி நலமும், உடல் நலமும், செல்வ வளமும் பெற வழிகாட்டுகின்றது. தும்பிக்கையான் பாதம் சார்கின்றவர்களுக்கு முதலில் கிடைக்கின்ற பயன் சொல் திறமையாகும் என்பது இப்பாடலின் முதன்மைக் கருத்தாகும். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்று குறிப்பிடும் திருவள்ளுவரின் கருத்தை அடியொற்றி மூதுரை கடவுளின் நம்பிக்கை கல்வி, செல்வம். உடல் ஆகியவற்றின் வளத்திற்கு அடிப்படையாகும் என்று குறிப்பிடுவது உணரத் தக்கது.  இவ்வாறு தமிழ் இலக்கிய மரபிற்கு ஏற்ப விநாயகர் வாழ்த்து கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது. அப்பாடல்,

ஷஷவாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு'

என்பதாகும். இப்பாடலில் மலர்கொண்டு வணங்குகின்ற எளிய வணக்கத்தையும், கடவுளின் திருவடியைச் சார்வதுதான் இறைவழிபாட்டு நோக்கம் என்பதையும், அவ்வாறு வழிபாடு செய்தால் திறமையான பேச்சு முதலியவை உண்டாகும் என்று மூதுரை குறிப்பிடுவதால் , அறிவு நலம் பெருக, ஆற்றல் மிக்க செயல்கள் விளங்க, செல்வ வளம் ஓங்க இறைப்பற்றுத் தேவை என்பதை மூதுரை வலியுறுத்துகிறது எனலாம். 

மூதுரை சிந்தனைகள் - 2

தமிழகப் புலவர்களின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் பெண்பாற் புலவராகிய ஒளவையார். சங்க அரசர்களுக்கு இடையே தூது சென்று போர் வெறியை மாற்றிய சங்ககால ஒளவையார் முதல், அறஞ்செய விரும்பு என்ற ஆத்திச்சூடி பாடிய ஒளவையார் வரை தமிழகத்தில் பல ஒளவையார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களில்ஒருவர் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்;த ஒளவையார் ஆவார். அவரால் பாடப்பெற்ற ஆத்திசூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நான்கு நூல்கள் பிற்கால நீதி இலக்கியங்களுக்குத் தொடக்கமாக அமைந்தன. 

கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர முப்பது வெண்பாக்களால் ஆன மூதுரையில்;  உவமை என்னும் தவலருங்கூத்தி ஆனந்த நடனமிடுகிறாள். உவமையில்லாத பாடல்களை மூதுரையில் காண்பது அரிது. ஒருமுறை தென்னந்தோப்பு வழியே புலவர் ஒளவையார் நடந்து செல்கிறார். சின்னஞ்சிறு தென்னை மரங்களைக் காணுகிறார்.  ஓங்கி வளர்ந்து காய்கள் காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்களையும் காணுகிறார்.  அத்தென்னை மரங்களின் வேர்ப் பகுதியில் வரப்புக் கட்டித் தண்ணீர் பாய்ச்சுகின்ற உழைப்பாளிகளையும் காணுகின்றார். இக்காட்சியைக் கண்டவுடன் ஒளவையார் மனதில் சிந்தனை எழுகின்றது. தண்ணீர் ஊற்றுகின்ற நல்ல செயலைச் செய்கின்றவர் உடனே பயன்கிடைக்கும் என்ற நினைப்பில் தண்ணீர் பாய்ச்சவில்லை.  எத்தனையோ ஆண்டுகள் கழித்துத்தான் அதன் பயனாகிய இளநீர் கிடைக்கும் என்ற சிந்தனை ஒளவையார் மனதில் சிந்தனை எழுந்;தது.  பாடல் ஒன்று பிறந்தது.  

ஷஷநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்'

என்பது அப்பாடல்.  இப்பாடல் தரும் சிந்தனை - தென்னை மரம் தன் வேரினால் உண்ட நீரைத் தலையால் இளநீராகத் தருகிறது.  அதுபோலப் பிறர் ஒருவர்க்கு நாம் நல்லது செய்தோமானால் , அது உடனே பயன் தரவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நல்ல பயனைத் தரும்.  ஆதலால் வாழ்க்கையில் நல்லதையே செய்ய வேண்டும் என்ற கருத்து கிடைக்கிறது. 

தமிழ்ப் புலவர்கள் தனியொரு இடத்தில் வாழ்வதில்லை.  தமிழகமெங்கும் ஊர்தோறும் சென்று அங்குள்ள வள்ளல்களையும், சான்றோர்களையும் பாடிப் பரிசில் பெறுவதுண்டு. பெண்பாற் புலவர் ஒளவையாரும் பல ஊர்களுக்கு யாத்திரையாகச் சென்றவர்தான். அவ்வாறு செல்லுகின்ற நேரத்தில் தஞ்சைத் தரணிக்கும் சென்றிருக்கலாம். பெருவுடையார் திருக்கோயில் அவர் பார்வையில் பட்டிருக்கலாம். பெருவுடையார் திருக்கோயிலில் இடம்பெற்ற வரலாற்றுச் சான்றுகளைத் தரும் கல்வெட்டுக்களைக் காணும் பேறு பெற்றிருக்கலாம்.  அக்கல்வெட்டுக்களில் ஒன்று சோழன் இராசராசேச்சுவரன் தனது 29ஆவது ஆட்சியாண்டில் தஞ்சை இறைவர் இராசராசேச்சுவரமுடையாருக்குத் திருமுறைகளை விண்ணப்பம் செய்தவர்களான சதாசிவன் , ஞானசிவன், பூர்வசிவன், திருநாவுக்கரையன் உள்ளிட்டவர்களுக்கு நன்கொடைகள் பல அளித்தமையைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் கண்டிருக்கலாம்.தஞ்சை மன்னன் இராராசேச்சுவரன் திருமுறை பாடுகின்ற சான்றோர்களான அவர்களுக்குப் பலவித உதவிகளையும் சிறப்புகளையும் செய்தமையை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.   அதுபோன்ற கல்வெட்டுக்களைப் பார்த்ததினால்; மூதுரையில் ஒருபாடல் இடம்பெறுகிறது.  நல்லவர்கள் யாருக்கேனும் உதவி செய்தால் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுப் போன்று அது என்றைக்கும் நிலைத்திருக்கும். அதே வேளையில் ஈரமில்லாத நெஞ்சத்தார்க்குச் செய்த உதவி ஓடுகின்ற தண்ணீரில் எழுதுகின்ற எழுத்து எப்படி மறையுமோ அதுபோலச் செய்த உடனே மறைந்துவிடும். உதவியைப் பெற்றவர்களும் உடனே மறந்துவிடுவார்கள் என்ற சிந்தனை கொண்ட பாடலாக அப்பாடல் எழுந்தது. அப்பாடல், ஷஷநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்திற்கு நேர்'

என்பது அது.  உலகத்தில் உதவி வேண்டாதார் எவரும் இல்லை. எனவே உதவி வேண்டுவார்க்குச் செய்யும்பொழுது தக்கவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிரப் பொல்லாதார்க்கு உதவி செய்தல் கூடாது என்ற கருத்தை இப்பாடலால் உணரமுடிகிறது. 

அத்தக்கவர்கள் யார் என்பதையும் மற்றோர் மூதுரைப் பாடல் அறிமுகம் செய்கிறது. அப்பாடலை உணரும் பொழுது சைவப் பெருநூலாம் பெரியபுராணத்தில் இடம்பெற்ற சான்றோர்களே நினைவிற்கு வருகின்றனர். அச்சான்றோர்கள் தங்களுடைய பணியை வறுமையுற்ற காலத்திலும் தங்களுடைய குணம் மாறாது , பண்பு அழியாது வாழ்ந்திருக்கிறார்கள். எதுபோல என்றால் இனியபாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது சுவை குன்றாது, சங்கு, கிளிஞ்சல் ஆகியவற்றைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் வெண்மை மாறாது. அதுபோல வறுமையால் வாழ்வில் துன்பப் பட்டாலும் சான்றோர்கள் உயர்ந்த பண்புடனே விளங்குவர். மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வார்கள் என்று அப்பாடல் குறிப்பிடுகிறது. நல்லார் ஒருவருக்கு உதவி புரிய வேண்டும். ஏனென்றால் அவர்கள் வறுமையுற்ற காலத்திலும் பண்பு மாறாது மேன்மக்களாய் விளங்குவர். அவர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப்போல் விளங்கும். 

ஷஷஅட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் - நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

      சுட்டாலும் வெண்மை தரும்.:

என்பது அது.  எனவே இன்றைய மூதுரை தரும் சிந்தனையாக நல்லார் ஒருவருக்கு உதவி புரிய வேண்டும். அது என்றைக்கும் கல்மேல் எழுத்துப் 

மூதுரை சிந்தனைகள் -3

தமிழில் தோன்றிய இலக்கியங்கள் அவ்வக்கால தமிழகத்து வரலாற்றைத் தந்தாலும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறநெறிகளையும் பதிவு செய்துள்ள நூல்களாகவே அமைந்துள்ளன. அத்தகைய இலக்கியங்களில் வாழும் நெறியைக் காட்டுகின்ற இலக்கியங்கள் , நீதி இலக்கியங்கள் என்ற வகையில் அடக்கப் பெறுகின்றன. பிற்கால நீதி இலக்கியங்களின் முன்னோடியாகத் திகழ்வது கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் பாடிய நீதிநூல்களாகும். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நாற்;பெரும் நூலில் மூதுரை முப்பது பாடல்களால் சிறந்த நீதிகளைக் குறிப்பிட்டு வாழ்விற்கு வழிகாட்டுகிறது. 

வாழ்வாங்கு வாழுகின்ற மனிதன் பொன்னுக்கும் பொருளுக்குமாக மட்டும் வாழாது தன்மானம்; இழக்காது வாழவேண்டும். பண்டைக் காலத்து முடி மன்னர்களில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன், சோழன் செங்கணான் என்பவனால் சிறைப்பிடிக்கப் பட்டபோது, சிறையில் குடிக்கத் தண்ணீரை யாசித்துப் பெறுவது தனது குலத்திற்குப் பெருமை உடையது அல்ல என்று,தன்மானம் காப்பதற்காக இறந்துபட்ட வரலாற்றுச் செய்தி புறநானூற்று 74ஆவது பாடலில் கிடைக்கிறது. அதுபோல மானம் காப்பவரின் பெருமையையும், பண்பாட்டினையும்  மூதுரையின் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

ஷஷஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ - கல்தூண்

பிளந்துறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்'

என்பது அப்பாடல்.  இப்பாடல் கருத்தை வலியுறுத்தும்பொழுது ஒரு உவமையையும் கொண்டுள்ளது.  கல்தூணானது தான் தாங்கக் கூடிய பாரத்திற்கு மேல் பாரம் ஏற்றினால் பாரம் தாங்காமல் அது பிளந்து துண்டாகி விடுமேயன்றி , வளையாது.  அதுபோல மானத்தைப் பெரிதாக விரும்புகின்றவர்கள் மானத்திற்காக உயிரை விடுவார்களே அன்றி மாற்றாரிடத்தில் பணிந்து வாழ மாட்டார்கள் என்ற அரிய கருத்தை உவமையின் மூலம் மூதுரை விளக்குகிறது. 

மானம் காத்து வாழுகின்றவர்கள் உறுதியாக நூலறிவு பெற்றவர்களாக விளங்குவார்கள். அந்த நூலறிவும் தாங்கள் கற்ற நூலின் அடிப்படையில் அமையும்.  மேலும் நூலறிவு பெற்றவர்கள் பெறுகின்ற செல்வமும் , அவர்கள் செய்த தவத்தால் அமையும். எனவே கல்வி வளமும் செல்வ வளமும் ஒருவருக்குத் தானாக அமைந்துவிடாது.  அவர்கள் கற்ற நூலின் அடிப்படையிலும்; அவர்கள் செய்கின்ற தவம் போன்ற செயல்களின் அடிப்படையிலும் தான் கல்வியும் செல்வமும் அமையும். இக்கருத்தை மூதுரைப் பாடல் விளக்குகிறது. 

ஷஷநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்

தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகும் குணம்:.

என்பது மூதுரைப் பாடலாகும்.  இப்பாடலில் உவமையும் அமைந்து பாடற் கருத்தினை விளக்குவது சிறப்புடையதாகும்.  நீரில் படர்ந்து பூத்திருக்கும் அல்லிச்செடி நீரின் அளவிற்கேற்பப் படர்ந்து பூத்துக் குலுங்கும். அதுபோலத் தான் கற்றவர்களின் நுண்ணறிவு அவர்கள் கற்ற நூல்களின் அடிப்படையில் அமையும்.  அவர்கள் பெற்ற செல்வம் அவர்கள் செய்த தவத்தின் அடிப்படையில் கிடைக்கும். இத்தகைய அறிவையும், செல்வத்தையும் பெற நல்ல குணம் அவர்களின் பிறப்புவழி கிடைக்கும் என்பதை மூதுரைப்பாடல் உவமையால் விளக்குகிறது.  

தனியொரு மனிதன் தானே சிறந்தவனாக விளங்கிவிட முடியாது. பிறரோடு சார்ந்து வாழ்ந்து அவர்தம் குணங்களையும், பண்பாடுகளையும் அறிந்து அவற்றைத் தானும் மேற்கொண்டு வாழுகின்ற பொழுதுதூன், தனிமனிதன் ஒழுக்க சீலனாக அமையமுடிகிறது. திருவள்ளுவப் பெருமானும் பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தின் மூலம் இக்கருத்தினை வலியுறுத்துவார்.  பண்டைக்காலத்து அரசர்களும் தங்கள் ஆட்சி சிறந்திடத் தக்க அறிவுசால் புலவர்களை அவைப்புலவர்களாகப் பெற்று அவர்கள்வழி நடந்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் அதியமான் நெடுமான்அஞ்சிக்கும் தொண்டைமானுக்கும் பிணக்கு ஏற்பட்டபொழுது, அப்பிணக்கைத் தீர்ப்பதற்கு அதியமான் ஒளவையாரைத் தூதனுப்பிய செய்தி புறநானூற்றால் கிடைக்கிறது. தூதுவந்த ஒளவையாம் நல்லோர் சொன்ன சொல்லைக்கேட்டு, தொண்டைமான் தன் பகையைத் தீர்த்துக் கொண்டதும் புறநானூற்று ஒளவையார் பாடல்களால் தெரியவருகிறது. எனவே தக்க சான்றோர் பெருமக்களை , நல்லோர்களை நட்பாகக் கொள்ளுவது வாழ்விற்கு நலம் பயக்கும். இதனை மூதுரைப்பாடல் சிறப்பாகக் கூறுகிறது.

ஷஷநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று'

என்பது பாடல்.  நல்லவர்களைக் காண்பதுவும் நல்லவர் சொல் கேட்பதுவும் நன்று என்று கூறுவதோடு , நல்லார் குணங்களைப் பிறர்கேட்க எடுத்துரைப்பதும் நன்று என்றும் பாடல் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கதாகும். நல்லார் குணங்களைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது அக்குணங்களைக் கேட்போர் அக்குணமுடைய நல்லோரைப்போலத் தாங்களும் வாழவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளாவார்கள் என்ற கருத்தைப் பாடல் வலியுறுத்துகிறது. எனவேதான் பண்டைத் தமிழ்ப் புலவர்களும் தாங்கள் சார்ந்து வாழ்ந்த மன்னர்களின் பெருமைகளை எடுத்துக் கூறியது இன்றைக்கு வாழுகின்றவர்களுக்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்றைய மூதுரைச் சிந்தனையாக மானம் காத்து வாழவேண்டும் என்பதும், நல்ல நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும், நற்செயல்களால் செல்வத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும், தக்க சான்றோர்களோடு. 

மூதுரை சிந்தனைகள் - 4 

இலக்கியங்கள் என்பன தாங்கள் தோன்றிய காலத்து வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் , படிக்கின்ற வாசகர்களின் வாழ்வு வளம்பெற அறக்கருத்துகளையும்  கூறுகின்றன. இத்தகைய இலக்கியங்களின் வெற்றிதான் ஒருமொழியின் உயர்விற்கு அடித் தளமாக அமைகின்றது. அறக்கருத்துகளைத் தந்து வெற்றி பெறும் இலக்கியங்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ்மொழியாகும். தமிழ்மொழி அற இலக்கியங்களை நீதி இலக்கியங்கள் என்பர்.  தமிழில் நீதி இலக்கியங்கள் காலந் தோறும் தோன்றியுள்ளன.  கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களைத் தந்தவர் ஒளவையாராம் பெண்பாற் புலவராவார். நான்கு நூல்களில் முப்பது வெண்பாக்களைக் கொண்ட மூதுரை , வாழ்விற்குரிய அரிய சிந்தனைகளை அள்ளித் தருகின்றது. 


சைவ அடியார்கள் அறுபத்திமூவரி;ல் ஒருவர் சண்டேசுவர நாயனார். விசாரசர்மர் என்ற இயற்பெயரை உடைய சண்டேசுவரர் பசுமாடுகள் தாமே கறந்த பாலைத் , தாம் எழுந்தருளச் செய்த இறைவனுக்கு அபிடேகம் செய்தார். அதன் உண்மைப் பொருளை அறியாத அவரின் தந்தையான எச்சதத்தன் அதற்கு இடையூறு செய்திட, இடையூறு செய்த தந்தையின் காலை விசாரசர்மர் வெட்டினார். அப்பக்தியின் முதிர்ச்சி கண்ட இறைவன் விசாரசர்மருக்குச் சண்டீசர் பதம் தந்து அருளியதோடு , எச்சதத்தன் தவறு செய்திருந்தாலும் விசாரசர்மரோடு சார்ந்த காரணத்தால் இறைவன் எச்சதத்தனுக்கும் திருவருள் புரிந்தான். இச்செய்தியிலிருந்து ஒருவருக்கு விளையும் நன்மை அவரைச் சார்ந்தோர்க்கு எல்லாம் கிடைக்கும் என்பது பெறப்படுகிறது.  இதனை மூதுரை ,


ஷஷநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை'

என்ற பாடலாகத் தருகிறது. விளையும் நெல்லுக்குப் பாய்ச்சப் படுகின்ற தண்ணீர், வாய்க்கால் வழியாக ஓடும். அவ்வாறு ஓடும் பொழுது வாய்க்காலின் இரு பக்கங்களிலும் முளைத்திருக்கும் புல்லுக்கும் தண்ணீர் கிடைக்கிறது.  அதுபோலத்தான் நல்லவர்கள் வாழுகின்ற நாட்டில் பெய்கின்ற மழை , நல்லவர்களுக்கு மட்டும் பயன்தராது வெற்றுவாழ்க்கை வாழும் மற்றவர்க்கும் பயனாகிறது என்பது இப்பாடல் கருத்தாக அமைந்துள்ளது.  எனவே நல்லோரைச் சார்ந்து வாழவேண்டும் என்ற அடிப்படைக் கருத்து மூதுரைப் பாடலால் வெளிப்படுகிறது எனலாம். 


தமிழ்மொழியின் வரலாற்றில் பொதியமலையில் வாழ்ந்த அகத்தியர் சிறப்பிடம் பெறுகிறார்.  புராணங்களில் இடம்பெற்ற செய்தியாக அகத்தியர் மூலம் தமிழ் வளர்க்கப் பட்டது என்ற செய்தியும் கிடைக்கிறது.  அகத்திய முனிவரை இலக்கியங்கள் குள்ள உருவமுடைய முனிவராகவே படைத்துக் காட்டுகின்றன. . ஷஷகுன்றெறிந்த வேள் வழிபடு குறுமுனிக்கு உரைத்தான்' என்ற திருவிளையாடற் புராணப் பாடலின் தொடர்( (புராணவரலாறு , பா. 15) அகத்தியரைக் குறுமுனி என்று குறிப்pடுவதை இங்கு நினைவு கொள்ளலாம். குறுமுனிவராகிய அகத்தியர் காவிரி நதியை உருவாக்கியது, தமிழின் வளர்ச்சிக்கு இலக்கணம் தந்தது ஆகிய  செயல்கள் பெருமையாகப் புராணங்களில் பேசப்படுகின்றன.  எனவே உருவத்தைக் கண்டு ஒருவரை எடைபோடுதல் கூடாது என்ற கருத்து, குறுமுனிவராம் அகத்தியர் மூலம் வெளிப்படுகிறது.  இதனை மூதுரையும் வலியுறுத்துகிறது. ஷஷமடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும். '

என்பது பாடலாகும்.  சிறியவரை இகழக்கூடாது என்பதற்குச் சிறிய பூவாகிய மகிழம்பூ , பெரிய தாழைமடல் தராத மணத்தைத் தருவதையும், பெரியகடல் தராத நீர்ச்சுவையை அதன் அருகில் உள்ள சிறிய ஊற்றுநீர் தருவதையும் மூதுரை உவமைகளாகக் காட்டி நிற்பது படித்துச் சுவைக்கத் தக்கதாகும்.  எனவே உருவம் சிறியதாயினும் கீர்த்தி பெரிது என்பதை உணரவேண்டும். 

நீண்ட உருவமுடைய ஒருவன் அவையத்தார்க்கு முன்னே கல்வி அறிவு இல்லாது விளங்கினால் அவன் மதிக்கப்பட மாட்டான். உருவத்தால் அவன் பெரியவனாக இருக்கலாம்.  ஆனால் அறிவில் அவன் குறைவுடையவன் ஆவான்.  அவனுக்கு ஒப்புமையாக மூதுரைக் காட்டு மரங்களைச் சுட்டிக்காட்டி ,காட்டு மரங்கள் மட்டும் மரமல்ல, அவனும் ஒரு மரம்தான் என்று குறிப்பிடுகிறது. 

ஷஷகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நன் மரம்.'

என்பது பாடல். பாடலால் அறிவற்றவனும் பிறர் மனம் அறியாதவனும் மரம் போன்றவர்கள் என்ற கருத்து வெளிப்படுத்தப் படுகிறது. இக்கருத்து திருவள்ளுவர் கூறிய ஷஷஅரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்'(997) என்ற திருக்குறள் கருத்தின் வளர்நிலையாகும். என்னதான் படித்திருந்தாலும் மக்கட் பண்பு இல்லாதவர்கள் மரம் போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.  மூதுரையோ மக்கட் பண்பிற்குரிய கல்வியறிவும், பிறர் மனத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் இல்லாதவர்களை மரம் என்று குறிப்பிடுவது வளர்நிலையாகும். 

எனவே இன்றறைய மூதுரைச் சிந்தனைகளாக நல்லார் ஒருவருக்குக் கிடைக்கும் பலன் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்பதும், உருவத்தை வைத்துக்கொண்டு ஒருவரை எடைபோடக் கூடாது என்பதும், தக்க அறிவும் பண்பும் இல்லாதவர்கள் காட்டு மரங்கள் ஆவார்கள் என்பதும் பெறப்படுகின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 5

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடிய புதிய ஆத்திசூடி , சுத்தானந்த பாரதியார் பாடிய பொதுநெறியாம் புது ஆத்திசூடி, வாணிதாசன் பாடிய புதிய ஆத்திசூடி உள்ளிட்ட ஆத்திசூடிகள் தோன்றுவதற்கு மூலமாக அமைந்த ஆத்திசூடி கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் பாடியதாகும். ஒளவையார் என்ற பெயரில் பல புலவர் பெருமக்கள் வௌ;வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர்தான் ஆத்திசூடி தந்த ஒளவையார்.  ஆத்திசூடியோடு கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நீதி நூல்களையும் படைத்தருளியவர் அவர். இந்நான்கு நூல்களும் மக்களின் வாழ்க்கை செம்மையாக அமையப் பல்வேறு கோணங்களில் அறக்கருத்துகளாம் நீதிக் கருத்துகளைத் தருகின்றன. 

இன்றைய சமுதாயத்தில் போலிப் பொருள்கள் அதிகமாக வழக்கில் இருக்கின்றன. மருந்துப் பொருள்களில் போலி மருந்துகள், உணவுப் பொருட்களில் போலி உணவுகள், அறிவியல் பொருள்களில் தரமற்ற போலி சாதனங்கள் எனப் பல்வேறு வகையில் போலிகள் பரவிக் கிடக்கின்றன.  இவற்றைவிட மிகவும் வருத்தத்திற்கு உரியது, படித்து பட்டங்களைப் பெறாதவர்கள் தாங்கள் படித்ததாகப் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துப் பணியில் அமர்ந்து விடுகின்ற கொடுமையும் நடக்கின்றது.  இத்தகைய போலித்தன்மை விரும்பத் தக்கது அல்ல என்பதை மூதுரை சிறப்பாகக் குறிப்பிடுகிறது. 

ஷஷகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி'

என்பது போலிகளை அடையாளம் காட்டும் மூதுரைப் பாடலாகும். காட்டில் தோகை விரித்து ஆடுகின்ற மயிலைக் கண்டு தானும் அதுபோல ஆடவேண்டும் என்று , வான்கோழியானது சிறகை விரித்து ஆடுகின்றது.  ஆனாலும் தோகை விரித்தாடும் மயிலின் அழகை வான்கோழியிடம் காண இயலாது.  அதுபோலத்தான் உண்மையாகக் கல்வியில் மேம்பட்டவரின் கவிதைச் சிறப்பை , வருணனை அழகை , நீதிக்கருத்தை , நல்லறிவைப் பெறாதவனின் கவிதையில் காண இயலாது என்பது பாடலின் கருத்தாகும். இ;ப்பாடலால் அறிவுடையவர்கள் போல் தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் சமுதாயத்தில் சிறப்பினைப் பெறமுடியாது என்பது தெளிவாகிறது. 

சமுதாயத்தில் தாம் கற்றதினால் உயர்ந்த புகழைப் பெறவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு மூதுரை ஒரு அற்புதமான சிந்தனையை வழங்குகிறது. அறிவுடையோரும் வல்லமை உடையவரும் தக்க காலம் வரும்வரை காத்திருந்து அடங்கியிருந்து செயல்களைச் செய்தால் புகழ் கிடைக்கும்.எனவே எவ்வளவுதான் உயர்ந்தவராயினும் காலம் கருதிச் செயல்களைச் செய்திடல் வேண்டும்.இதற்கு  எடுத்துக்காட்டாக விளங்குவன பூத்துக் குலுங்கும் மரங்களாகும். எந்த ஒரு மரமோ அல்லது செடியோ தனக்குரிய காலத்தில்தான் பூக்கவும் செய்யும், காய்த்துப் பழுக்கவும் செய்யும்.  அதுபோலத்தான் தங்கள் செயல் வெற்றி பெற அனைவரும் தக்க காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.  

ஷஷஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தா லன்றி;ப் பழா.'

என்பது மூதுரை தரும் சிந்தனையாகும்.  

இவ்வாறு காலம் வரும்வரை அடக்கத்தோடு இருப்பதைக் கண்டு குறைவாக மதிப்பிடக் கூடாது.  அத்துடன் அவர்களை அலட்சியப் படுத்தவும் கூடாது.  யார் ஒருவர் அமைதியாக இருந்து செயல்களைச் செய்து முடிக்கின்றார்களோ அவர்களை உலகம் பாராட்டும்.  உலகம் பாராட்டும் அளவிற்கு அவர்கள் அமைதியாக இருப்பதை மூதுரை உவமையின் மூலமாகப் பாராட்டிப் போற்றுகின்றது. 

ஷஷஅடக்க முடையான் அறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாம் கொக்கு'

என்பது பாடல். நீரில் வாழும் கொக்கு பெரிய மீன் கடைக்கும்வரை நீரில் காத்துக் கொண்டிருக்கும் என்பது உவமையாகும்.  இதனை, வள்ளுவப் பேராசானும் ஷஷகொக்கு ஒக்கக் கூம்பும்பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த விடத்து ' (490) என்று குறிப்பிட்டு , மூதுரைக்கு முன்னோடியாகத் திகழுகிறார்.  எனவே பயன் வரும் காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. 

சார்ந்தாரைக் கொண்டுதான் ஒருவர் வாழ்வின் சிறப்பு அமையும் . சார்ந்தாரின் ஒருவகையினர் உறவினர் ஆவார்கள்.  எனவே தக்க உறவினரோடு உறவு கொள்வது மிக இன்றியமையாததாகும். தக்க உறவினர் யார் என்பதை மூதுரை படம்பிடித்துக் காட்டுகிறது.  சார்ந்தவர்க்குத் துன்பம் வருகின்ற பொழுது உற்றுழி உதவுகின்றவர்கள் தான் உறவினர் ஆவர். துன்பம் கண்டு விலகுவோர் உறவினர் ஆகமாட்டார்கள்.  இதனைச் சிறந்த உவமை மூலம் மூதுரை விளக்குகிறது. 

ஷஷஅற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு'

என்பது பாடல்.  குளத்தில் நீர்வற்றும் பொழுது அந்நீரை உண்டு வாழ்ந்த பறவைகள் பறந்து விடுகின்றன.  நீரை உண்டு வாழ்ந்த ஆம்பலும், நெய்தலுமாகிய மலர்க்கொடிகள் அந்நீரைவிட்டு அகலாது நீரில்லாததால் வாடிக்கிடக்குமே அன்றி அகலாது என்ற உவமை மூலம் உற்றாரை அiடாளம் காட்டுகிறது மூதுரை.  இவ்வாறு இன்றயை மூதுரைச் சிந்தனையாக போலிக் கல்வி பயன்தராது என்பதும், கற்ற அறிவுடையோரும் சான்றோரும் காலம் கனியும் வரை காத்திருந்து செயல்களைச் செய்வர் 


    மூதுரை சிந்தனைகள் - 6


தமிழ் வழங்குமிடம் எங்கும் குழந்தைப்பருவ நிலையில் கற்க வேண்டிய நூல்களாக ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற நீதி நூல்கள் வழங்கி வந்தன. அண்மைக் காலத்தில் கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் அவற்றுக்கு முக்கியம் அளிக்கத் தவறிவிட்டன. என்றாலும் ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற  நூல்களோடு அவற்றை ஒட்டி எழுந்த மூதுரை, நல்வழி நூல்கள் என்றைக்கும் தமிழர்தம் வாழ்விற்கு வழிகாட்டும் நீதி இலக்கியங்கள் என்பதை மறுக்க இயலாது.  ஆத்திசூடி முதலிய நான்கு நூல்களைப் படைத்தவர் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆவார். அவருடைய நான்கு நூல்களில் ஒன்றான மூதுரை முப்பது வெண்பாக்களைக் கொண்டதாகும். அந்நூலில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லறங்கள் கூறப்பெறுவதோடு விலக்க வேண்டிய தீயவைகளும் வலியுறுத்தப் பெறுகின்றன. 


பாரதத் தந்தை காந்தியின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு அவர் அருகே கொலுவீற்றிருந்த மூன்று பொம்மைகள் நினைவிற்கு வரலாம். ஒன்று கண்ணை இருகைகளால் மூடியிருக்கும்.  ஒன்று காதை மூடியிருக்கும், ஒன்று வாயை மூடியிருக்கும்.  அதன் பொருள் தீமையைக் காணாதே, தீமையைக் கேளாதே, தீமையைப் பேசாதே என்பதாகும். இச் சிந்தனையை காந்தியடிகளின் காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே ஒளவையார் பாடிய மூதுரையில் காணமுடிகிறது. 


ஷஷதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் தீதே'

என்பது அப்பாடல்.  காந்தியடிகளின் சிந்தனையைப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் பாடலாகத் தந்த மூதுரை, அவரின் சிந்தனைக்கும் அப்பாற் சென்று , தீயவரோடு இணங்கி வாழ்வதும் தீது என்று நான்காவதாக உரைத்திருப்பது தமிழுக்குச் சிறப்பைத் தருகிறது. எனவே தீமையை விலக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  


அதுபோல தீயகுணம் உடையவர்களுக்கு உபகாரம் செய்தலை விலக்க வேண்டும் என்ற சிந்தனையையும் பிறிதொரு பாடலில் மூதுரை பதிவு செய்துள்ளது.  சீவகசிந்தாமணியில் இக்கருத்து இடம்பெற்றிருப்பதைக் காப்பிய நோக்கில் அறியமுடிகிறது.  ஏமாங்கத நாட்டுத் தலைவனாக விளங்கிய அரசன் சச்சந்தன்.  அவன்; தன் மனைவி விசயையின் மேல் கொண்ட காதலால் , தீய குணமுடைய அமைச்சனாகிய கட்டியங்காரனிடம் அரசாளும் அதிகாரத்தை கொடுத்துத் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டான் என்பதை அவ்விலக்கியத்தின் மூலம் உணரலாம். எனவே தீயவர்களுக்கு உதவி செய்தால்  செய்தவர்க்கே அழிவு ஏற்படும் என்பது தெளிவாகிறது. இதனை மூதுரை, 

ஷஷவேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல்  - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்'

என்ற பாடலாகத் தருகிறது.  பாடலின் பொருள் - பாம்பு கடித்துக் குற்றுயிராகக் கிடந்த வரிப்புலிக்கு விஷம் நீக்கும் வைத்தியத்தைச் செய்த மருத்துவனே அந்தப் புலிக்கு இரையானாற் போல , அற்பப் புத்தி உடையவர்க்கு உபகாரம் செய்தால் , உபகாரம் செய்தவர்க்கே தீமையாய் முடியும். அந்த உபகாரம் கூட முழுமையாகப் பயன்படாது , கல்லின் மேல் எறிந்த மண்பானை சிதறுவது போலப் பயனற்றுப் போய்விடும் என்பதாகும். எனவே பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு ஏற்ப , உதவி செய்கின்ற பொழுது , தக்கவர்க்கே உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனை மூதுரைப் பாடலால் கிடைக்கின்றது. 

வாழ்க்கையில் சுற்றந் தழால் என்பதற்கேற்;ப உடன்பிறந்தார், சுற்றத்தாருடன் சேர்ந்துதான் வாழ வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அச்சுற்றத்தார்களை முழுமையும் நம்பி விடக் கூடாது. ஏன்? உடன் பிறந்தவர்களை; கூட ஆய்ந்து பார்த்துத்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மூதுரை சிந்தனையாகத் தருகிறது. 

ஷஷஉடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும்  வியாதி - உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு'

என்பது பாடலாகும். இதன் பொருள் - உடலில் தோன்றிய நோயே உயிரைக் கொல்லுகிறது.  அதுபோல உடன் பிறந்தோரும் , உற்றாரும் என்றைக்கும் நமக்குத் துணையாக இருப்பார்கள் என்று எண்ணிச் சேர்ந்து வாழ்தல் கூடாது. சில நேரங்களில் அவர்களே நம் அழிவிற்குக் காரணமாகவும் அமைந்து விடுவார்கள். அதே நேரத்தில் முன்பின் தொடர்போ, உறவோ இல்லாத யாரோ ஒருவர் மலையில் தோன்றிய மூலிகை மருந்து போல , நம் துன்பமாகிய நோயைத் தீர்க்க உதவுவார்கள். இக்கருத்தை வலியுறுத்துவது போல் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய குமணனுக்கு அவன் தம்பி இளங்குமணனே உயிர்கொல்லும் நோயாக அமைந்தான் என்ற செய்தி புறநானூற்;றில் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி அறிந்த பெருஞ்சித்திரனார் என்ற புலவர் தம் கவி முயற்சியால் அக்கொடுஞ்செயலை நீக்கி , இளங்குமணனை உணரவைத்துக் குமணனுக்கு நலம் செய்தார். எனவே உடன்பிறந்தாரும் , உற்றாரும் ஆராய்ந்து  பார்க்க வேண்டியவர்கள் என்பது புலனாகின்றது. 

இத்தகைய பாடல்களால் தீயவரோடு வாழ்வதும்,  தீயவர்களுக்கு உதவுவதும், உடன்பிறந்தாரை ஆராயாது ஏற்றுக் கொள்வதுமாகிய அல்ல செயல்கள் நீக்கப்பட வேண்டும் என்ற மூதுரை சிந்தனைக் கருத்துகள் கிடைக்கின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 7

தமிழ்மொழி இலக்கியங்களில் மக்கள் ஏற்றுப் பயன்கொள்ளத் தக்க அறச்சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன.  பண்டைத்தமிழ் இலக்கியங்களான சங்கஇலக்கியங்கள் தமிழர்தம் செம்மாந்த அறவாழ்வை எடுத்தியம்புகின்றன. பின் சமுதாயத்தில் அறக்கொள்கைகள்  சிறிது விலகுமானால் அவை மீண்டும் மீள்பார்வைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது , தனித்தனி அற இலக்கியங்கள் தோன்றியதும் உண்டு. அத்தகைய அடிப்படையில் எழுந்தவைதான் திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வழிக்கொண்டு பிற்கால நீதி இலக்கியங்களும் தோன்றின. அந்த வரிசையில் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையாரின் படைப்புகளான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதிஇலக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஒளவையாரால் படைத்தளிக்கப் பெற்ற மூதுரை நூலில் தமிழ்ச் சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரிய நீதி முறைமைகள் நன்கு வலியுறுத்தப் பெறுகின்றன. தமிழ்ச் சமுதாயம் வினைக்கொள்கையில் நம்பிக்கை உடையதாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கொள்கை தமிழரிடம் வலுப்பெற்ற கொள்கையாகும்.  இதனைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களும் பின்னர்  மூதுரையும் வலியுறுத்துகின்றன. 

ஷஷஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர

நாழி முகவாது நானாழி - தோழி

நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்

விதியின் பயனே பயன்:'

என்ற மூதுரைப் பாடல் விதியின் வலியை வலியுறுத்தும் பாடலாகும். அளவற்ற நீரை உடைய கடலுள்  ஒருபடி என்னும் அளவு கொண்ட படியை ஆழ அமுக்கி முகந்தாலும் , அது நாலு படி நீரைக் கொள்ளாது.  அதுபோல ஒரு பெண்ணுக்கு மிக்க பொருளும் , தக்க கணவனும் கிடைத்தாலும் அவள் செய்த முன்வினையின் அடிப்படையில் தான் இன்ப வாழ்வை அனுபவிக்க முடியுமே அன்றி, விதியை மீறி அனுபவிக்க இயலாது என்ற பொருளை இப்பாடல் தருகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் , கோவலனும் மாதவியும் அனுபவித்த வாழ்க்கைக்கு ஊழ்வினை தான் காரணம் என்பதை நூலாசிரியர் இளங்கோவடிகள் ஆங்காங்கு வலியுறுத்துச் செல்வதை இங்கு நினைவு கூரலாம்.இதன்மூலம் மூதுரை தமிழர்களின் வினைக்கொள்கை நம்பிக்கையைத் தனது சிந்தனையாகத் தருகிறது. 

மற்றொரு பாடலில் மூதுரை எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பயன் கிடைக்கும் பொழுது ஊழ்வினைக்கு ஏற்பத்தான் பயன் கிடைக்கும் என்பதை வலியுறுத்த , ஒரு உவமை நிகழ்ச்சியைப் பாடலில் பதிய வைத்துள்ளது. அதாவது கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தருவை அடைய வேண்டும் என்று பல்லாற்றானும் முயற்சி செய்த ஒருவனுக்கு , அக்கற்பகத்தரு அவன் விரும்பிய பொருளைக் கொடுக்காது , எதற்கும் பயன்படாத காஞ்சிரங்காயைக் கொடுத்தாலும் கொடுக்கும் என்ற செய்தியை அப்பாடல் பதிவு செய்துள்ளது. இப்பதிவோடு முற்பிறப்பில் செய்த தீவினைதான் விரும்பியதற்கேற்பப் பயன் கிடைக்காது விதிப்படிதான் பயன் கிடைக்கும் என்று காரணக் கருத்தையும் பாடல் பதிவு செய்துள்ளது. இப்பதிவுக்குரிய பாடல். 

ஷஷஎழுதியவா றேகாண் இறங்கும்மட நெஞ்சே

கருதியவா றாமோ கருமம் - கருதிபோய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.'

என்பது பாடலாகும். பாடலில் எழுதியவறே காண் என்ற தொடர் விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதால் தமிழரின் வினை நம்பிக்கை புலனாகின்றது.  

தமிழரின் வினைக் கொள்கை நம்பிக்கையில் மற்றொரு கோணம் உயிர்கள் அவ்வப் பிறப்பில் செய்த வினைகள் தாமே வந்து சேராது. அந்த வினைகளைக் கடவுள்தான் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து வரும் பிறவிகளில் உயிர்களை நுகர வைக்கின்றான் என்ற கொள்கையை நம்புவதும் தமிழரின் வினைக் கொள்கையாகும். தமிழரின் சமயங்களில் ஒன்றான சைவ சித்தாந்தக் கொள்கையில் இக்கொள்கை பெரிதும் வலியுறுத்தப் படுவதாகும். சைவ சித்தாந்தத்தின் தலைமை நூலான சிவஞானபோத உதாரண வெண்பாவில் , ஷஷஎத்தனுவில் நின்றும் இறைபணிவார்க்கு முன்செய் வினையும் தருவான்முன்' என்ற தொடர் அமைந்து இக்கருத்து வலியுறுத்தப் பெறுகிறது. சித்தாந்த சாத்திரங்களில் இக்கருத்து அமைவதற்கு முன்னோடியாகத் திகழ்வது மூதுரைப் பாடல் எனக் கொள்ளலாம். இலக்குமியாகிய தெய்வத்தால் தான் வாழ்வில் வளம் கிடைக்கிறது.  அவள் இல்லையென்றால் வளம் கிடைக்காது என்ற செய்தியை அப்பாடல் தருகிறது. 

ஷஷமருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை

ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து

போம்போ தவளோடும் போம்'

என்பது பாடலாகும். இறைவனது ஆணையால் உயிர் செய்த வினைக்கேற்ப இலக்குமியின் திருவருள் ஓர் ஆன்மாவில் இணைந்திருக்கும் பொழுது சுற்றம், உயர்ந்த செல்வம், நல்ல உருவம் , உயர்வான குடிப்பிறப்பு ஆகியவை கிடைத்திடும். தீவினை வரின் இலக்குமி நீங்கிடக் கிடைத்தது அனைத்தும் நீங்கிவிடும் என்ற கருத்தை இப்பாடல் தருகிறது. இதன்படி ஒரு உயிரினுடைய உயர்வும் தாழ்வும் இறைவனருளால் உயிர்களின் விதிப்படி கிடைக்கிறது என்பது பெறப்படுகிறது. 

இத்தகைய பாடல்களால் ஒருவரின் வாழ்வியல் விதிப்படிதான் இன்பமாக அமையும் என்பதும், ஓர் மனிதனின் விருப்பம் அவன் செய்த முன்வினைப் படிதான் கிடைக்கும் என்பதும், முன்வினைப் பயனை இறைவன் ஊட்டுவதால் வினைப்படி உயிர்கள் நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கின்றன என்பதையும் இன்றைய மூதுரைச் சிந்தனைகளாக அறிகின்றோம். 


மூதுரை சிந்தனைகள் - 8


ஷஷஆத்தி சேர் கொன்றை அழகு தமிழ் மூதுரை

பாத்தி சேர் நல்வழி பண்புலகம் - பூத்த

      நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்

குறுந்தமிழ் என்றறிந்து கொள்'

என்பது தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் நீதி நூல்களைப் போற்றிய பாடலாகும்.  ஆத்திசூடி முதலிய நீதி நூல்கள் பண்டைக் காலத்தில் திண்ணைப் பள்ளிகளில் முறையாகச் சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டன.  எனவே குழந்தைப் பருவத்திலேயே முறையாகத் தமிழ் அறிவும், வாழ்க்கையில் நல்லொழுக்கக் கடைப்பிடிப்பும் வாய்க்கப் பெற்றன. அந்த வாய்ப்பு முதுமை வரை துணை செய்தது. ஆனால் இன்றைக்கோ புதிய கல்விமுறையால் நீதி இலக்கியப் பயிற்சி குறைந்துவிட்டது. என்றாலும் நீதி இலக்கியச் சிந்தனை தேவை. அதிலும் இக்காலத்து நீதி இலக்கியங்களின் முன்னோடியாக விளங்கிய ஒளவையாரின் நூல்களில் ஒன்றான மூதுரை இலக்கியச் சிந்தனை  இன்றைய அவசர உலகத்திற்கு மிகவும் தேவையானதாகும்.  

கி.பி. பனிரெண்டாம் நூற்றண்டு ஒளவையார் பாடிய மூதுரை அறச்சிந்தனைகளை வலியுறுத்தும் பொழுது ஒரே பாடலில் தொடர்புடைய இரு கருத்துகளைக் குறிப்பிடுகிற நடையைப் பெற்றிருக்கிறது. அத்தகைய பாடல்கள் மூலம் மிகச்சிறந்த சிந்தனைகளை அறிய முடிகிறது. சிறந்த குணங்களையும் சீரான ஒழுக்கங்களையும் பெற்றிருக்கின்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பப் பட்டாலும் துன்பத்தைப் பெரிதாகக் கருதாது தங்கள் பண்பு குன்றாமல் வாழ்வார்கள்.  ஆனால் பண்பற்ற மக்கள் தாழ்வுற்றால் செய்யக் கூடாத செயல்களைச் செய்து சமுதாயத்தில் சீரழிவார்கள். இக்கருத்தை,

ஷஷசீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்

றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய

பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடமுடைந்தக் கால்'

என்ற மூதுரைப் பாடல் விவரிக்கிறது.  பொன்னால் செய்யப் பெற்ற ஒரு குடம் உடைந்தால் பானை என்ற வடிவம் நீங்கினாலும் பொன்னுக்குரிய சிறப்பு உடைந்த பகுதிகளில் என்றும் இருக்கும்.  அதுபோலப் பண்புடையவர்கள் தாழ்வுற்றால் அதற்காக வருந்தாமல் என்றைக்கும் சால்பு உடையவர்களாகவே வாழ்வர்.  ஆனால் மண்பாண்டம் உடைந்தால் உடைந்தவை எதற்கும் பயன்படாது மண்ணாக அழிவது போலப் பண்பற்றவர்கள் தாழுற்றால் சீரழிவார்கள் என்று தக்க உவமைகள் மூலம் பண்புடையாரையும், பண்பற்றவரையும் மூதுரை அடையாளம் காட்டுகிறது. 


அதுபோலப் பிறிதொரு பாடலில் அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டுப் பேசுகின்ற பாங்கினைக் காணமுடிகிறது. 

ஷஷமன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு'

என்பது மூதுரைப் பாடலாகும்.  நாடாளும் மன்னனையும் , கல்வி நலம் கொண்ட கற்றவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாடாளும் மன்னவனைக் காட்டிலும் கற்ற அறிவுடையோரே சிறப்புடையவராவார்.  எவ்வாறு என்றால் மன்னனுக்கு அவன் ஆளும் நாட்டில் மட்டும்தான் சிறப்புண்டு.  ஆனால் கற்றவர்க்கோ சென்ற இடமெல்லாம் புகழும் சிறப்பும் கிட்டும்.  எனவே கற்ற அறிஞரே சிறப்புடையவர் என்று சிந்தனையை மூதுரை வழங்குவது சிந்தனைக்கு விருந்தாகும். 

பிறிதொரு பாடலில் கற்ற அறிஞரையும் கல்லாத மூடரையும் எடுத்துக்காட்டி அறச்சிந்தனையைத் தருகிறது மூதுரை. 

ஷஷநற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்  சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் 

காக்கை உகக்கும் பிணம்'

என்பது மூதுரைப் பாடலாகும். நல்ல தாமரை மலர் மலர்ந்திருக்கும் குளத்தைத் தேடிச் செல்லுகின்ற அன்னப் பறவை போல , அறிஞர்களை நட்புக் கொள்ள கற்ற அறிஞர்கள் நாடிச் செல்வர். ஆனால் சு:டுகாட்டுக் காக்கையானது பிணத்தைத் தேடிச் செல்வது போல அறிவில்லாத மூர்க்கர் மூர்க்கரைத் தேடிச்சென்று அவரோடு வாழ எண்ணுவர் என்று அன்னத்தையும் காக்கையையும் கற்றவர்களுக்கும் மூடர்களுக்கும் முறையான உவமைகளாக்கி மூதுரை நூல் சிந்தனையை வழங்குகிறது. 

அதுபோல மற்றொரு பாடலில் வஞ்சனை உள்ள நெஞ்சத்தாரையும், வஞ்சனை இல்லாத நெஞ்சத்தாரையும் அடையாளம் காட்ட இரு உவமைகளை மூதுரை கையாண்டு அரிய சிந்தனையைத் தருகிறது. 

ஷஷநஞ்சுடைமை தானறிந்து நாகங் கரைந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பார்  கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்'.

என்பது பாடல். விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் ஒளிந்து வாழும். அதுபோல  வஞ்சனை உள்ளவர்கள் உள்ளத்தில் எண்ணத்தை மறைத்து வெளியில் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள.; நீர்ப்பாம்பிற்கு விஷமில்லாததால் அது எங்கும் பயமின்றித் திரிவது போல , உள்ளத்தில் வஞ்சனை இல்லாதவர்கள் வெளிப்படப் பேசுவார்கள் என்ற கருத்து தக்க உவமைகள் மூலம் வெளிப் படுத்தப் படுகிறது. 

இத்தகைய பாடல்களால் சீர்மை உடையோர், சீர்மை அற்றோர் பண்புகளையும், மன்னர் - கற்றோர் சிறப்புகளையும், அறிஞர் - மூடர்களின் நடைமுறைகளையும், வஞ்சகர் - வஞ்சகமற்றோர் தன்மைகளையும் மூதுரை உவமைகளால் விளக்கும் கருத்துகள் இன்றயைச் சிந்தனைகளாகக் கிடைக்கின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 9


தமிழ்மொழியின் எழுத்து வடிவத்தைக் கற்பதற்கு முன்னரே கருத்தின் வடிவத்தை நெஞ்சி;ல் நிறுத்தப் பயன்பட்டவை நீதி இலக்கியங்களாகும்.  ஆம். குழந்தைப் பருவத்தில் எழுத்தின் வடிவத்தை எழுதிப் பழகுவதற்கு முன்னரே தமிழ்மொழி கூறும் நல்ல அறக்கருத்துகளை குழந்தை மனதில் பதிய வைக்க ஆத்திசூடி ,கொன்றைவேந்தன் நூல்களின்; தொடர்களைக் கூறிக் கேட்கவைத்துத் தமிழ்கூறும் நல்லுலகத்தார் குழந்தைகளின் மனதில் பதிய வைத்தனர்.  அத்தகைய பதிவுகள் முதுமைக் காலம் வரை  பயன்பட்டன. எனவே நீதி நூல்கள் சமயம் கடந்து , உயர்வு தாழ்வு மறைந்து, கற்றுக்கொள்ளத் தக்க நூல்களாகக் கருதப் பெற்றன. அந்த அடிச்சுவட்டில் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயம் வாழ்வாங்கு வாழ , ஒளவைப்பாட்டி எனும் பெரும்புலவரால் படைத்தளிக்கப் பெற்ற நான்கு இலக்கியங்களுள் மூதுரை ஒன்றாகும்.  இதற்குக் காப்புச் செய்யள் வாக்குண்டாம் என்று தொடங்கியதால் வாக்குண்டாம் என்ற பெயரும் வழங்கப் பெற்றது. அறக்கருத்துகளைக் கூற ஒளவையார் முப்பது வெண்பாக்களை மூதுரையாகத் தந்து இன்றைக்கும் அந்நூல்வழி வாழ்ந்து வருகிறார்.  அவரின் மூதுரை சிந்தனைக் கருத்துகளைப் படிக்கப் படிக்க வாழ்வு மேம்படும் என்பது உண்மை. 


வாழ்வு மேம்பட நீதிக் கருத்துகளை அடுக்கிச் சொல்கிற முறைமையையும் மூதுரை நூலில் காணமுடிகிறது. முதலில் நான்குவகை யமன்களைக் குறிப்பிடும் பாடல் நினைவிற்கு வருகிறது.  கல்லாத மனிதர்களுக்குப் படித்தவர்களின் அறவுரை யமன் போலத் தோன்றும், அறநெறியில் நில்லாதவர்களுக்கு அறச்செய்திகள் யமனாகத் தெரியும். வாழை மரம் குலையை ஈன்றபின் அழிந்து விடுவதால் வாழைக்குலை அம்மரத்திற்கு யமனாய் விடும். குடும்பத்தில் வாழும் கணவனாகிய ஒரு ஆண்மகனுக்குத் தன் இல்வாழ்க்கையில் தனக்கு ஒத்து நடவாத மனiவி யமனாகத் தோன்றுவாள் என்று நால்வகை யமன்களை மூதுரை வரிசைப்படுத்திக் கூறுகிறது. 


ஷஷகல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்'

என்பது அம்மூதுரைப் பாடல். இப்பாடல் மூலம் வாழ்க்கைக்கு உபதேச மொழிகளும் . அறச்சிந்தனைகளும், உடன்பட்டு வரும் மனைவியும் நன்றாக அமைதல் வேண்டும் என்பது பெறப்பட்டு அவை அமையாதபோது வாழை மரத்திற்கு அதன் குலையே யமனாகத் தோன்றுவது போல உபதேச மொழியும், அறச்சிந்தனையும், அறிவற்றவர்களுக்கு யமனாகவும், உடன்படா மனைவி வாழத்துடிக்கும் கணவனுக்கு யமனாகவும் அமைவதை ஓர் அஃறிணை உவமை மூலம் ஒளவையார் விளக்கியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். 


மற்றொரு பாடலில் கோபத்தினுடைய வகையை மூன்று வகையாக மூதுரை வகுத்துக் காட்டுகின்றது. கீழ்மக்களுக்குச் சினம் வந்தால் கல்பிளந்தது போல், வேறுபட்ட இருவர் பிரிந்து விடுவர். இடையினராய் விளங்கும் கூட்டத்தார் சினம் கொள்வாரேயானால் பொன் ஆபரணங்கள் பிளந்தால் ஒட்டவைப்பது போல , வேறுபட்ட இருவரிடத்தில் வேறொருவர் சமாதானம் செய்யக் கூடுவார்கள்.  உயர்ந்த சான்றோர்களுக்கு இடையே கோபம் ஏற்பட்டால் அம்பினால் கிழித்து நீரில் ஏற்பட்ட வடுப் போலக்  கோபம் வந்த நேரத்தில் பிரிந்து உடனே தங்களுக்குள்ளே சமாதானமாகிக் கூடிவிடுவர் என்ற கருத்தை இப்பாடல் குறிப்பிட்டுச் சினம் கொண்டோர் வகையை மூவகையாகக் கூறுகிறது.  .

ஷஷகற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ n;டாப்பாரும் போல்வரே - விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்.' 

என்பது பாடல்.  பாடலில் சினம் கொண்டவரைக் கயவர் என்றும், இடையர் என்றும், சான்றோர் என்றும் மூன்று வகையாகப் பிரிக்கப் பெற்றிருக்கிறது. . அவர்களின் கோபத்திற்குக் கல் பிளவும்;, பொன் பிளவும்;, தண்ணீர் பிளவும் உவமைகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன.  இத்தகைய வரிசை அமைப்புப் பாடலுக்குச் சிறப்பைத் தருகின்றது எனலாம். 

வேறொரு பாடலில் மனைவியின் சிறப்பினை உடைய மனைவியும், மாறுபட்ட குணத்தினை உடை மனைவியும் ஆகிய இருவகையினரை எடுத்துக்கூறி , அவரகள்; வாழும் வீட்டை அறிமுகப் படுத்துகிறது மூதுரை. 

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை

இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்' 

என்பது பாடல். இப்பாடலில் மனைவியின் இரண்டு விதமான குணங்கள் கூறப்பெற்று நற்குண நற்செயல்கள் கொண்ட மனைவி வாழும் வீட்டில் நன்மை நினலைத்திருக்கும் என்றும்,  நற்குணம் இல்லாதவள் வீட்டில் வளம் இல்லாது புலிவாழும் குகை போல வெறுமை காணப்படும் என்றும் கூறப்பெற்றுள்ளது. இவ்வாறு நற்குண மனைவியையும், கணவனுக்கு எதிராகப் பேசும் குணமற்ற மனைவியையும் மூதுரை இரண்டு வகையாகக் குறிப்பிட்டு, இரண்டாவதாகிய மனைவிக்கு மட்டும் உவமை கூறியிருப்பது சிறப்புடையதாகும். 

எடுத்துக் கொள்ளப் பட்ட மூன்று பாடல்களில் முதல் பாடல் நான்கு வகையான யமன்களையும், இரண்டாவது பாடல் மூன்று வகையான சினங்கொண்ட மக்களையும், மூன்றாவது பாடல் இரண்டு வகையான மனைவியரையும் அடையாளம் காட்டி , வாழ்வியல் சிந்தனைகளை மூதுரை தருகின்றது . 

மூதுரை சிந்தனைகள் - 10


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியார் தமிழ்மொழியின் சிறப்பைப் பாடுகிறார்.  அதற்குக் காரணம் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்ப இராமாயணம் ஆகியவை உள்ளிட்ட இலக்கிய வளங்களே ஆகும் என்பதும் அவரது சிந்தனையாகும்.  தமிழ்மொழியின் இலக்கிய வளங்களில் நீதி இலக்கியங்கள் என்ற வகைப்பாடு அமைந்து , அது பல இலக்கியங்களைப் பெற்றிருக்கிறது. அவ் இலக்கியங்கள் பண்டைக்காலப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும், பிற்கால நீதி இலக்கியங்கள் என்றும், தற்கால நீதி இலக்கியங்கள் என்றும் பிரிக்கப் பெற்றுள்ளன. பிற்கால நீதி இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வன கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் பாடிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி என்ற நான்கு நூல்கள் ஆகும். முன்னிரு நூல்களும் தனித்தனி வரிகளைக் கொண்டு விளங்க, பின்னிரு நூல்கள் செய்யுள் அமைப்பில் விளங்குகின்றன. பின்னிரு நூல்களில் மூதுரை என்ற நீதிநூல் கடவுள் வாழ்த்துச் செய்தியோடு முப்பது வெண்பாக்களைப் பெற்று, ஆக 31 செய்யுட்களைக் கொண்டுள்ளது. அம் 31 பாடல்களும் தனித்தனிச் செய்யுட்களாக , வௌ;வேறு காலக் கட்டங்களில் பாடப்பெற்றுப் பின் தொகுக்கப் பெற்றனபோல் அமைப்பினைப் பெற்றுள்ளது. 

மூதுரை தரும் முப்பது பாடல்களில் குறிப்பிடத் தக்க சில பாடல்கள் நல்ஒழுக்கமும் உயர்ந்த அறிவும் கொண்ட சான்றோர்களை அடையாளப் படுத்தி, அச்சான்றோர்கள் போல் வாழவேண்டும் என்ற நீதிக்கருத்தை வலியுறுத்துகின்றன. அத்தகைய பாடல்களில் ஒன்று. 


சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடா தாதலால் - தந்தம்

தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால்

மனஞ்சிறிய ராவரோ மற்று'

என்ற பாடலாகும்.  இப்பாடலின் பொருள் - மெல்லியதாகிய சந்தனக் கட்டை தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போன காலத்திலும் மணம் தருவதில் குறையாது. அதுபோல வெற்றிமாலை சூடிய அரசர், சான்றோர் தங்கள் செல்வம் கொடுத்துத் கொடுத்துக் குறைந்து பட்டாலும் கொடுப்பதில் சிறிதும் தளரமாட்டார்கள் என்ற கருத்தினைத் தருகிறது. அங்கத நாட்டுக்கு அரசனாக விளங்கிய கர்ணன் கொடை மடம் கொண்டவன். அவன் போர்க்களத்தில் கூடத் தன்னிடம் யாசித்த கண்ணனுக்குக் கொடுப்பதற்குப் பொன்னும் பொருளும் இல்லை என்றாலும் , அவன் கேட்டபடி தான் செய்த தருமத்தையே தானமாகக் கொடுத்தான் என்ற பாராத நிகழ்வு இப்பாடலைப் படிக்கும் பொழுது நம் உள்ளத்தில் நிழலாடும். பண்டைக் காலத்தில் அரசர்கள் என்றும் குடிமக்கள் என்றும் சமுதாயம் இரண்டு வகையாகப் பிரிக்கப் பெற்றிருந்தமையால் இப்பாடல் அரசராகிய சான்றோரின் கொடைச் சிறப்பைச் சுட்டிக் காட்டிற்று. 

அதுபோல மற்றொரு பாடல் கல்வி அறிவில் சிறந்த குடிமக்களாம் சான்றோரின் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது. 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம். '

என்பது பாடல். மரங்கள் தம்மை வெட்டிச் சாய்க்கும்வரை, வெட்டுகின்ற மனிதர்க்கு நல்ல நிழலைத் தந்து வெயிலை மறைத்து இன்பத்தைத் தரும். அதுபோல அறிவிற் சிறந்தவர்கள் தங்கள் உயிர் போகும்வரை தனக்குத் தீமை செய்தாலும், தமக்குத் தீமை செய்தவரைத் தவிர்க்காது தம்மால் இயன்றவரை அவரைக் காத்திடுவார்கள் என்பதாகும்.; முதற்பாடலில் சந்தன மரத்தின் ஒரு பகுதியான சிறிய கட்டையை உவமையாகக் கூறிச் சிந்தனையைத் தந்த மூதுரை இப்பாடலில் முழுமையான மரத்தையே உவமையாக்கி அறிவுடையோரின் செயலைச் சிந்தனைக் கருத்தாகத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். 

மற்றொரு பாடலில் வலிமை மிக்க துணை இல்லாமல் குடிமக்கள் வாழ இயலாது என்ற கருத்தில் துணையாகிய சான்றோர் குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளனர். 

ஷஷபண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்

விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமம் செயல்'

என்பது பாடல். இப்பாடலின் கருத்து - நெற்பயிர் விளையும் பொழுது முதலில் தோன்றுவது பால்அரிசி. பால் முற்ற முற்ற அடுத்துத் தோன்றுவது உமியாகும். உமி பின்னால் தோன்றினாலும் அந்த உமியை நீக்கிவிட்டால் வெற்று அரிசி மீண்டும் முளைக்காது.  உமியோடு கூடிய நெல்தான் முளைக்கும். அதுபோல மிகச்சிறந்த ஆற்றலுடையவரும் தம் காரியத்தைச் செய்யும் பொழுது தன்னுடைய திறமையன்றிப் பிறருடைய துணை இல்லாமல் தானே தனித்து நின்று செய்து வெற்றிபெற முடியாது என்பதாகும். இக்கருத்தினால் சமுதாயத்தில் வாழுகின்ற தனிமனிதர் , தன் செய்கையினால் மட்டும் வெற்றியடைய முடியாது என்பதால் , பக்கத் துணiயாகப் பிற அறிவுடையாரையும் துணையாகக் கொண்டு வாழவேண்டும் என்பது பெறப்படுகிறது. 

எடுத்துக் கொள்ளப் பெற்ற மூன்று பாடல்களின் மூலமாகத் தலைமை சான்ற அரசர், சான்றோர் தாழ்விலும் கொடை நல்குவர் என்பதும், சான்றோர்கள் தமக்குத் தீமை செய்தவரையும் காப்பாற்றுவர் என்பதும், சமுதாயத்தில் தனிமனிதர் வெற்றி பெற அறிவுடையோரைத் துணைவராகக் கொள்ள வேண்டும் என்ற மூதுரைச் சிந்தனைகள் பெறப்படுகின்றன. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக